COVID19

கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கங்கள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Economic implications of COVID-19

கொவிட்-19 இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தாக்கங்களில் வேலை நாட்களின் எண்ணிக்கையை நேரடியாகக் குறைத்தல் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சமூக இடைவெளி, நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாளுவற்கான மருத்துவ செலவுகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் தேவையான சமூக இடைவெளி  தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தயாராக இல்லாதவர்களுக்கு ஏற்படக் கூடிய பாரிய தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான செலவுகள் ஆகியன உள்ளடங்கும். 

வருமானத்தில் உடனடி விளைவு இருக்கும் என்றாலும், வைரஸ் பரவுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் கொள்கைகளிலிருந்து நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவுகள் ஏற்படும். நோய்த்தொற்றுகளின் வீதத்தைப் பொருத்தவரை, இதுவரை நாங்கள் சிறப்பாகச் செய்துள்ளோம். பிரச்சினை என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்தி நோய்தடுப்புப் பொறிமுறையை நம்மால் பராமரிக்க முடியுமா  என்பதாகும். 

பொருளாதாரத்திற்கான இந்த அதிர்ச்சியானது நாம் சந்தித்த (2008-2012) உலகளாவிய நிதி நெருக்கடியைவிட பெரியதும் மற்றும் ஆழமானதுமாகும். எமது முக்கிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களில் குறைவுகளை சந்தித்தமை காரணமாக அந்த நெருக்கடியின் வரையறுக்கப்பட்ட விளைவு காணப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு எமது சுற்றுலாத் துறையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் கொவிட்-19 தாக்கியபோது அதிலிருந்து நாங்கள் முழுமையாக மீளவில்லை. ஆனால் விளைவானது  ஒப்பீட்டளவில் சிறியதாகும் ஒரு துறைக்கு வரையறுக்கப்பட்டதாகவும் இருந்தது.

ஆரம்ப நிலைமைகள்

கொவிட்-19 தாக்கியபோது நாங்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தோம். 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2.6% ஆக இருந்தது, கொவிட் -19 இன் தாக்கத்துடன் கணிசமான சீர்திருத்தங்கள் மற்றும் பெரிய உட்பாய்ச்சல்கள் இல்லாமல், குறிப்பாக நேரடி வெளிநாட்டு முதலீடு இன்றி, எமது சராசரி வளர்ச்சி விகிதத்தை மீட்டெடுப்பதனை (மூன்று தசாப்தங்களுக்கு 4% சராசரி) எதிர்வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அடைவதற்குக் கடினமாக இருக்கும்.

2018 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமாகக் குறைவடைந்தது. சுற்றுலாத்துறையின் உடனடி எதிர்காலம் நன்றாகத் தெரியவில்லை. எங்கள் ஏற்றுமதிகள் நடப்புக் கணக்கில் பணம் செலுத்தும் அளவுக்கு உதவுவதற்குப் போதுமான அளவில் அதிகரிக்கவில்லை. இதற்கிடையில், கடன் வாங்கிய நிதியின் ஒரு பகுதி உட்பட நமது அந்நிய செலாவணி ஒதுக்கமானது சுமார் 7.0 பில்லியன் டொலராக குறைவானதாகவே உள்ளது. இறுதியாக, எதிர்வரும் 2020-2023 ஆகிய நான்கு ஆண்டுகளில் 16 .0 பில்லியன் டொலர் பெறுமதியுயான பாரிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கம்

வைரஸ் பரவலின் கணிசமான பொருளாதார தாக்கத்தை நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்பார்க்கலாம், பிந்தையது முந்தையதை விட முக்கியமானது. வழங்கப்பட்ட நேரடி தாக்கம் என்னவென்றால், இன்றுவரை ஊழியப்படையானது மெய்நிகர் தனிமைப்படுத்தலில் உள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இதற்கு முன்னர் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிதிகள் செலவு செய்யப்படும். மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிக செலவு ஏற்படும்.

சிறப்பு நிதி ஒதுக்கீடு காணப்பட வேண்டும். மற்ற நாடுகளின் அனுபவத்தைப் பார்த்தால் இந்த நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும், ஆனால் சரியான நெறிமுறைகளைப் பின்பற்றினால் குறிப்பாக சமூக இடைவெளி மூலம் நமது நோய்த்தொற்றுகள் குறைவாகவே இருக்கும். நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ சேவைகளுக்கான அணுகலை வழங்க சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றின் தாக்கத்தை நாம் குறைக்க முடியும். அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் பயிற்சி பெற்ற தொற்றுநோயியல் நிபுணர்களை நம்புவது உதவும்.

பொருளாதாரத்தில் வைரஸின் நேரடித் தாக்கமானது, அனைத்து துறைகளிலும் உற்பத்தி கிட்டத்தட்ட ஒரு முழு நிறுத்தத்திற்கு வந்துள்ளமையால்  வெளியீடு குறைந்துள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில் மட்டுமே அதிகரிக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவிருப்பதுடன்  அவர்கள் இன்னும் தங்கள் வீடுகளிலே உள்ளனர்.

தேசிய வருமானத்தைப் பொறுத்தவரை - ஊதியங்கள், இலாபங்கள் மற்றும் வட்டி வருமானங்கள் அண்மைக் காலத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். இது மீட்டெடுப்பதற்கு மிகவும் தேவையான கொள்கைகளை உருவாக்குகிறது. அவசரகாலத்தை நாங்கள் சமாளிக்கும் அதே வேளை, முறையான கொள்கைகளுக்கு நாம் அண்மைய எதிர்காலத்திற்கு அப்பால் சிந்திக்க வேண்டும். இந்த அவசர நிலைமைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கொவிட் -19 தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிகழ்ச்சிகள்

நிவாரண நடவடிக்கைகளின் முழு பட்டியலையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில் பின்வருவன உள்ளடங்கும்:

  • வருமான வரி செலுத்துவதற்கான தயவுக்காலங்கள். மற்றும் சேர்பெறுமதி வரி, வாகன அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல், தண்ணீர்க் கட்டணங்களை செலுத்துதல் மற்றும் ரூ. 15,000 இற்குக் குறைந்த  ஆதன வரிகளைச் செலுத்துதல், 50,000 க்கும் குறைவான மாதாந்த  கனட்டைப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிப்பு வழங்குதல்.

  • முச்சக்கர வண்டிகளின் குத்தகை கடன் கொடுப்பனவுகளை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துதல்.

  • மே 30 வரை அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களிடமிருந்து கடன் தொகையை மீளஅறவிடாமை.

  • ரூபா. 1 மில்லியனுக்கும் குறைவான தனிநபர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துதல்.

  • பயிற்சியைப் பின்பற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ரூபா. 20,000 கொடுப்பனவு வழங்கப்படுதல்.

  • நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான அக்ரஹாரா காப்புறுதிச் சலுகைகளை இரட்டிப்பாக்குதல்.

  • சுற்றுலா மற்றும் தைத்த ஆடைத் துறைகளைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு (SME) ஆறு மாத கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு காலம் தாழ்த்துதலை வழங்குதல்.

  • பணச் சந்தையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன கூட்டாக திறைசேரிப் பிணையங்கள் மற்றும் பத்திரங்களில் 7% வட்டி வீதத்தில் முதலீடு செய்தல்

இந்த நடவடிக்கைகள் எதுவும் விலை முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவை வழிகாட்டல்கள், கட்டளைகள் மற்றும் தொகைரீதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

நிவாரணம் வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளில் பின்வருன  அடங்குகின்றன

  • கடனட்டைகளில் உள்நாட்டு கொடுக்கல்வாங்கல்களில் அதிகபட்சம் 15% வட்டி விகிதம் ரூ. 50,000 வரை மற்றும் குறைந்தபட்ச மாதாந்த கட்டணங்களில் 50% குறைப்பு.

  • அனைத்து வங்கி கிளைகளும் ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரங்களில் திறந்திருத்தல்.

  • துறைமுகங்கள், சுங்கம் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள் அத்தியாவசிய உணவு, உரம், மருந்துகள் மற்றும் எரிபொருளை தொடர்ந்து தொடர்புடைய நபர்களுக்கு வழங்குதல்.

  • சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் சமுர்த்தி அட்டை வைத்திருபவர்களுக்கு வட்டி இல்லாத முற்பணம்  அல்லது 10,000 ரூபாவை  சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்குதல்.

  • சமுர்த்தி அதிகாரசபையானது உடனடியாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சத்துணவுப் பொருட்களுக்கான உரித்துச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

  • சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு சேர்பெறுமதி வரி மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்களித்தல்.

  • உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இலங்கை வங்கியில் இல் ஒரு சிறப்பு கணக்கு திறக்கப்பட்டது. ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் அரிசி, பருப்பு மற்றும் உப்பு வழங்கப்படுதல். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த நிதியில் பங்களிப்பதற்காக வரி மற்றும் அந்நிய செலாவணிக் கட்டுப்பாடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இருந்தபோதிலும், ஏழைகளுக்கும் குறிப்பாக வேலையற்றோர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருளாதார நிவாரணம் வழங்குவது கடினம். சமுர்த்தி சரியாக இலக்கு வைக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். உதவி பெறத் தகுதியான சிலருக்கு இந்த வருமான இடமாற்றங்களுக்கு அணுகல் இல்லை, அதிக வருமானம் உள்ள ஏனையோர் சமுர்த்தி நிதியைப் பெறுகிறார்கள். தகுதியான ஏழைகளுக்கு உதவ எமது எதிர்கால திட்டங்களில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

சிலி போன்ற பிற நாடுகளில் விரிவான குடும்ப மற்றும் வருமான தரவுகளின் அடிப்படையில் வருமான பரிமாற்ற முறை உள்ளது. சமுர்த்தி பெறாதவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பங்கீட்டு அட்டைகளை வழங்குவதற்கு எமது அரசாங்கம் எடுத்திய சமீபத்திய முயற்சி உதவியாக இருக்கும். ஆனால் நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு, நாம் சமுர்த்தி திட்டத்தை சீர்திருத்தி தகுதியானவர்களுக்கு நன்மைகளை வழங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியானது கடன் கட்டுப்பாடுகள் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது, இது பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால சிதைவுகளை உருவாக்கி அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தக் கொள்கைகள் மூலம், போட்டி பரிமாற்ற வீதம் உட்பட பொருளாதாரத்தை நிர்வகிக்க விலைகளைப் பயன்படுத்துவதை விட தொகைரீதியான நடவடிக்கைகளில் அதிக நம்பகத்தன்மையை இது குறிக்கிறது. விலை முறை பயன்படுத்தப்படாதபோது, ​​பகுத்தறிவற்ற ஒதுக்கீடு மற்றும் ஊழலை வளர்க்கும் ஒரு அதிகாரம் அல்லது “ஸார்” மூலமாக அளவுகளை ஒதுக்க வேண்டி ஏற்படும்.

முடிவுகள்

கொவிட்-19 ஆல் உருவாக்கப்பட்ட குறுகிய கால சூழ்நிலையை, குறிப்பாக நுகர்வு தரப்பில் தீர்வு காண ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் பொருத்தமானவையாகும். ஆனால் தனியார் மருந்தகங்களை மூடுவது போன்ற முழுமையான பணிநிறுத்தங்கள் நீரிழிவு, நாள்பட்ட இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற தினசரி மருந்துகள் தேவைப்படுபவர்களின் சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதற்கு எதிர்மறையானவை. தனியார் மருந்தகங்களை திறக்க அனுமதிப்பது போன்று கட்டுப்பாட்டை தளர்த்துவது சாத்தியமானது என்று கண்டறியப்பட்டது.

இருப்பினும், நாங்கள் ஏற்கனவே பலவீனமான ஆரம்ப நிலைமைகளிலிருந்து தொடங்குவதால், இந்தப் பணி எளிதானதல்ல. மேலும், இது பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கை விரிவாக்குவதற்கும் அதிகாரத்தை அதிகம் பயன்படுத்துவதற்கான ஆபத்தைக் கொண்டுள்ளது. சில நேரங்களில், அதை குறைத்துப் பயன்படுத்துவது, வருமான இடமாற்றங்கள் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை செயல்படுத்துவது பொது சேவையை பெரிதும் சார்ந்துள்ளது. இது திறமையாகவும் விரைவாகவும் செயல்படுவதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் கையை மிகைப்படுத்தி அரசாங்கத்திற்கு கூடுதல் மற்றும் நிரந்தர அதிகாரத்தை வழங்குவதற்கான ஆபத்தை கொண்டுள்ளது. அந்த சோதனையின் முடிவுகளை 1970-1977 காலகட்டத்தில், வருமான உச்சவரம்புகளுடன், நெல் போக்குவரத்து மீது 100% இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் நாம் கண்ணுற்றோம். அரசாங்கத்தின் அதிகமாகத் தலையீடு செய்தமை அந்த காலகட்டத்தில் பேரழிவு தரும் முடிவுகளுக்கு வழிவகுத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தது, வேலைவாய்ப்பைப் போலவே வாழ்க்கைத் தரத்திலும் அபரிதமான வீழ்ச்சி ஏற்பட்டது.

இலங்கை மத்திய வங்கியானது கடன் அளவில் செல்வாக்குச் செலுத்துவதற்கு நேரடி தொகையியல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது. இது கொவிட்-19 அதிர்ச்சியைக் கையாள்வதற்கான பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கும் மற்றும் ஒதுக்கங்களை  முகாமை செய்வது  உள்ளிட்ட தொகைரீதியான நடவடிக்கைகளுக்கான அதன் விருப்பத்தை குறிப்பாக நெகிழ்வான மற்றும் போட்டி பரிமாற்ற வீதங்களைத் தவிர்த்தல்.

நேரடி நடவடிக்கைகள் போட்டி இல்லாத பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும், குறிப்பாக நமது ஏற்றுமதி வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். இறக்குமதியை நேரடியாக தடை செய்வது ஏற்றுமதிக்கு எதிரான ஒரு சார்பை உருவாக்கும். பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களில் நாம் தங்கியிருக்க வேண்டும். குறுகிய காலத்தில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது அவசியமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியை உறுதிப்படுத்த இது போதாது.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை எட்வகாடோ நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.


இலங்கையின் பலவீனமான பொது நிதிகள் கொவிட்-19 இலிருந்தான பொருளாதார அதிர்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தும்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Sri Lanka’s weak public finances will exacerbate economic shocks from COVID-19

இலங்கையின் தளம்பும் பொது நிதியானது கொவிட்-19 இன் வீழ்ச்சி மூலம் மற்றொரு அடியைப் பெற உள்ளது. ஒரு தொற்றுநோயின் மிக முக்கியமான அம்சம் எப்போதும் மனித செலவாகவிருந்தபோதிலும் வைரஸின் பரவல் பொருளாதாரத்திற்கு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுகாதாரம், போக்குவரத்து, விவசாய மற்றும் சுற்றுலாத் துறைகள் உட்பட பல வழிகள் மூலம் தொற்றுநோய் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எல்லைகள் மூடப்பட்டு உலக சந்தைகள் மெதுவாக இருப்பதால்; வர்த்தகம் பாதிக்கப்படுகிறது, எனவே ஏற்றுமதிகள் பாதிக்கப்படுகின்றன.

இலங்கையின் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை மேலும் பாதிக்கப்படும், மேலும் சில முக்கிய ஏற்றுமதியாளர்களின் கட்டளைப் புத்தகங்கள் அடுத்த காலாண்டில் பாதிக்கப்படும். சர்வதேச விநியோகச் சங்கிலிகள் ஒப்பந்த ஏற்றுமதிகள் தடைப்பட்டிருப்பதால், சந்தைகள் கூறுகளாக மீண்டும் திறக்கப்படும் போதும், மூலப்பொருட்கள் குறுகிய விநியோகத்தில் இருக்கக்கூடும். இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தாக்கமானது உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கூட பாதிக்கும். விவசாயமானது இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நடுகைப் பொருட்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள்  ஆகியவற்றில் தங்கியுள்ளது. உள்ளூர் தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள், கூறுகள் மற்றும் உதிரிப்பாகங்களை வெளிநாடுகளிலிருந்து பெறுவதனால் மேலும் அவை முழு இயல்திறனில் வேலை செய்ய முடியாமல் போகலாம்.

காசுப் பாய்ச்சலானது நின்று போய், கடன்கள் அதிகரிக்கும் போது, ​​பல வணிகங்களால் அதனைச் சமாளிப்பது கடினம். 2008/10 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியின் போது, ​​உற்பத்தி நிறுவனங்களிடையே, குறிப்பாக ஆடைத் துறையில் ஆட்குறைப்பு காரணமாக 90,000 இலங்கையர்கள் வேலை இழந்தனர். தற்போதைய நெருக்கடியின் தாக்கம் அதைவிட மோசமாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் நிதி நெருக்கடியைப் போலன்றி, இந்த தொற்றுநோய் தாக்கம் முன்னேறிய நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. ஏற்றுமதி சந்தைகளின் இழப்பு காரணமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பாதிக்கப்பட்டன, ஆனால் அவற்றின் உள்நாட்டு சந்தைகள் பாதிக்கப்படவில்லை. இந்த தொற்று அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை பாதிக்கிறது. அன்றாட ஊதியம் பெறுபவர்கள் தங்களது ஏற்கனவே நிச்சயமற்ற வருமானங்கள் மேலும் குறைந்து போவதைக் காண்பார்கள். சிறு வியாபாராங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

இதன் பொருள் வளர்ச்சி மேலும் குறையும் என்பதாகும். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையானது வருமான வீழ்ச்சி மற்றும் அதிகரித்த செலவினங்கள் காரணமாக இரட்டிப்பாகும். குறைந்த அளவிலான செயல்பாடு என்பது வரிச் சேகரிப்பின் குறைந்த அளவைக் குறிக்கிறது. விற்பனை மற்றும் இறக்குமதி குறைந்து வருவதால், சேர்பெறுமதி வரி மற்றும் இறக்குமதி வரிச் சேகரிப்புக்கள் குறையும். வணிக இலாபங்கள் குறையும்போது, ​​வருமான வச் சேகரிப்பு குறையும். இதற்கிடையில், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்திற்கான சுகாதார செலவுகள் (சோதனை கருவிகள் முதல் மருத்துவமனை செலவுகள் வரை) மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவுகள் உயரும். இதனால் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை விரிவடையும் மற்றும் அரசாங்கம் மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். இலங்கையின் வட்டிப் பற்றுச்சீட்டு இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ .1 டிரில்லியன் ஆகும்.

பொது நிதி வலுவானதாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும், ஆனால் தொடங்குவதற்கு ஆரோக்கியமற்ற இலங்கையின் நிதி - சமீபத்திய வரி வெட்டுக்களால் பலவீனமடைந்தது. வீழ்ச்சியை மதிப்பிடுவது கடினம், ஆனால் கிடைக்கக்கூடிய கொள்கை விருப்பங்களை மதிப்பிடுவதற்கு முதன்மை சிக்கல்களை மறுபரிசீலனை செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

இலங்கை 2016 ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான வசதியைப் பெற்றது. இது 1950 ஆம் ஆண்டில் இந்த நிதியத்தில் இணைந்ததிலிருந்து இவ்வாறு பெற்ற 16 வது நிகழ்வாகும்- இது அடிப்படை சிக்கல்களின் முறையான மற்றும் நீண்டகால தன்மையைக் குறிக்கிறது. சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் "வரி வருவாயில் இரண்டு தசாப்த கால சரிவை மாற்றியமைத்தல் மற்றும் பொது நிதிகளை ஒரு நிலையான நடுத்தர கால கட்டத்தில் வைத்தல்" ஆகும். வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைக்க அரசாங்க வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், எனவே அரசாங்கத்தின் கடன் (பற்றாக்குறைகள் குறையும்போது, ​​கடன் வாங்க வேண்டிய அவசியம் குறைகிறது) குறைகின்றது.

பிரபலமான கற்பனையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை: அரசாங்க செலவினங்களைக் குறைத்தல், இது சமூக மற்றும் நலச் செலவுகளை எதிர்மறையாக பாதிக்கிறது. செலவினக் குறைப்பு சமூக நலத்திட்டங்களைக் குறைத்து வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை மூடுகிறது. முந்தைய ‘நல்லாட்சியின்’ கீழ், இலங்கை இதற்கு நேர்மாறாக நடவடிக்கைகளை மேற்கொண்டது: பற்றாக்குறையை ஈடுகட்ட வரிகளை அதிகரித்தது. செலவினம் தீண்டப்படாமல் விடப்பட்டதால் உண்மையில், தொடர்ந்து அதிகரித்தது.

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்க வருவாயின் பெரும்பகுதி நுகர்வு வரி குறிப்பாக சேர்பெறுமதி வரி வடிவத்தின் மூலம் வருகிறது, எனவே அதிகரித்த வரியின் சுமை பொது மக்கள் மீது எப்படியும் விழுந்தது, இது கடுமையான அதிருப்தியைத் தூண்டியது. வருமான வரியும் அதிகரிக்கப்பட்டது, வணிக சமூகத்தை கோபப்படுத்தியது. இவ்வாறு அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட தரப்பினரின் கோபத்திற்குள்ளாகி மற்றும் மிகவும் செல்வாக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

பொது நிதி ஓரளவு மேம்பட்டது, ஆனால் ஒருபோதும் வலுவடையவில்லை. 2019 ஏப்ரலில் நடந்த தாக்குதல்களால் விடயங்கள் மீண்டும் நழுவத் தொடங்கின. 2019 நவம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வானது "குறிப்பிடத்தக்க வருமானப் பற்றாக்குறையின் காரணமாக நிதி இலக்குகள் இனி அடைய முடியாது" என்று குறிப்பிட்டது.

2019 நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசாங்கம் டிசம்பரில் பெரும் வரி வெட்டுக்களை அறிவித்தது. வரி அதிகரிப்பின் செல்வாக்கற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விரக்திக்கு பதிலளிப்பது தவறு அல்ல, ஆனால் குறைப்புக்களின் விரிவானது வியக்க வைக்கிறது. பெருநிறுவன வருமான வரி 28% முதல் 24% வரை குறைக்கப்பட்டது, சேர்பெறுமதி வரியானது (VAT) 15% முதல் 8% வரை அரைவாசியாகக் குறைக்கப்பட்டது; நிறுத்தி வைத்தல் வரி, நாட்டைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் பொருளாதார சேவை கட்டணம் ஆகியன அகற்றப்பட்டன. சீர்குலைந்த பொருளாதாரத்திற்குப் புத்துணர்ச்சியளிப்பதே இதன் நோக்கமாகும், ஆனால் செலவானது - அரசாங்க வருவாயில் கால் பகுதி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-4% பொது நிதிகளை சீர்குலைத்தது.

2020 பெப்ரவரி 7 ஆம் திகதியன்று, சர்வதேச நாணய நிதியம்: “விரிவாக்கப்பட்ட நிதி வசதியினால் (EFF) ஆதரிக்கப்படும் திட்டத்தின் கீழ் முதன்மை மிகை இலக்கானது பலவீனமான வருமான செயல்திறன் மற்றும் அதிகமான செலவினங்கள் காரணமாக  2019 ஆம் ஆண்டில் கணிசமான அளவு வித்தியாசத்தால் தவறவிடப்பட்டதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீத பற்றாக்குறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.” நிதியின் படி, இலங்கையின் 2020 வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.9% ஆக உயரக்கூடும், இது 2015 இற்குப் பின்னரான மிக உயர்ந்த வீதமாகும். தொற்றுநோயைப் பொறுத்தவரை, இது நம்பிக்கையுடன் கூடியதாகும். 2019 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறை 6.5% ஆக இருந்தது, ஆனால் நிதி அமைச்சின் கூற்றுப்படி, “2019 ஆம் ஆண்டிற்கான உண்மையான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது 8 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்க வேண்டும்”, ஏனெனில் ரூபா .367 பில்லியன் செலவுகள் செலுத்தப்படாமலும், ஆண்டு முடிவில் கணக்கிடப்படாமலும் இருந்தன. 

இதற்கிடையில், தரப்படுத்தல் முகவராண்மைகள் ஃபிட்ச் (Fitch) மற்றும் எஸ் என்ட் பி (S&P) ஆகியன ‘நிலையானதாகவிருந்த’ இலங்கையின் கடன் பற்றிய கண்ணோட்டத்தை “எதிர்மறை” ஆகக் குறைத்தன. இலங்கையின் ஏற்கனவே தள்ளாடும் பொது நிதி இப்போது கொவிட்-19 இன் கூடுதலான பொருளாதார அதிர்ச்சியை சமாளிக்க வேண்டும். 

பொது சுகாதார அவசரநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய மனித செலவு ஆகியவற்றைக் கையாள்வது கொள்கை வகுப்பாளர்களின் மனதில் இருக்க வேண்டும். ஆயினும்கூட தெளிவான பார்வை கொண்ட பொருளாதாரச் சிந்தனையானது சமமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், மேலும் குறிப்பாக நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மனித செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான் ஒரு முடக்கம் அல்லது முழுமையான ஊரடங்கு உத்தரவின் ஒப்பீட்டு செலவுகளை எடைபோடுவது முக்கியம்.

அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தலைவலி வெளிநாட்டுக் கடனை நிர்வகிப்பதாகும். மத்திய வங்கியின் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நடுத்தர கால கடன் மூலோபாயம் இனி இருக்காது என்ற அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது - நடுத்தர காலத்திற்கு 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி, 5 சதவீத பணவீக்கம் மற்றும் வரவுசெலவுத் திட்டப் பறறாக்குறை 3.5 சதவீதம். நடுத்தர கால மூலோபாயம் சிதைவடையும் நிலையில், முதிர்ச்சியடைந்த கடனை அரசாங்கத்தால் நீடிக்க முடியுமா?

2020 பெப்ரவரியில் மொத்த ஒதுக்கங்கள் 4.6 மாத இறக்குமதிக்கு சமமான 7.9 பில்லியன் அமெரிக்க டொலரர்களாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் வெளி கடன் திருப்பிச் செலுத்துதல் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது சீனாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனால் பகுதியளவில் மீள்நிதியளிக்கப்பட்டுள்ளது, இது மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது . குறைந்தபட்சம் மூன்று மாத இறக்குமதியைப் பராமரிக்கும் அதே வேளையில், இந்த ஆண்டின் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பினால் குறைந்தபட்சம் 2-2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட நாடு எதிர்பார்க்கிறது.

அதன் பொது நிதி ஒழுங்கீனங்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம் புரண்டதுடன் தவிர்க்க முடியாத கடன் தரமிறக்குதல் காரணமாக, கடன் வாங்க சந்தைக்கு திரும்புவது சாத்தியமில்லையென தரப்படுத்தல் முகவராண்மைகளினால் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாண்டு முதிர்ச்சியடையும் இலங்கையின் இறையாண்மை பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இதை எழுதும் நேரத்தில், முதலீட்டாளர்கள் தற்போதைய வருமானத்தில் 101 சதவிகித அதிகரிப்பினைக் கேட்கிறார்கள், அடுத்த ஆண்டு முதிர்ச்சியடையும் பத்திரங்கள் 44% ஆகும். ஒரு புதிய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் சந்தைகளுக்கு நம்பிக்கையை மீட்டெடுக்கும், ஆனால் இது வலிமிகுந்த இறுக்கத்திற்கு திரும்புவதைக் குறிக்கும். மேலும் பிணை எடுப்புகளுக்கு மேல்முறையீடு செய்வது மிகவும் கவர்ச்சிகரமான தெரிவாகும்.

கடன் நிவாரணம் கோரிய நாடுகளில் இலங்கையும் உள்ளது. இந்த அழைப்புக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியன ஆதரவு அளித்துள்ளன. இந்த அழைப்பு ஏழ்மையான நாடுகளுக்கானது என்றாலும், இந்த அமைப்புகள் சமீபத்தில் இலங்கை போன்ற உயர் நடுத்தர வருமான வகையாக மாற்றப்பட்ட நாடுகளை பரிசீலிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. சில விமர்சகர்கள் அரசாங்கம் எளிதாக மீளச்செலுத்தாதிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இது எளிதாகத் தோன்றினாலும், வணிகக் கடனை மறுசீரமைப்பது கூட ஆபத்தானதாகும்: திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைப்பது அல்லது குறைப்பது சந்தைகளால் திருப்பிச்செலுத்தத் தவறும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது, அதாவது சிறிது காலத்திற்கு சந்தைகளுக்குத் திரும்புவது கடினமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, முதலீடு மற்றும் தனியார் துறை கடன் பொதுவானதாக இருப்பதால் இது பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. இது வங்கி தோல்விக்கு வழிவகுத்து நிதித் துறை பாதிக்கப்படலாம்.

1998-2000 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், ஈக்வடோர் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய மறுசீரமைப்பின் விளைவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு 2002 இனால்  காட்டப்பட்டது:

"உண்மையான வருமானம் மற்றும் நிதியுதவியின் வீழ்ச்சி உள்நாட்டுக் கேள்விக்குப் பரவியது. நம்பிக்கை சரிந்ததுடன் தனியார் முதலீடு கடுமையாக குறைக்கப்பட்டது. தனியார் நுகர்வில் ஒரு பின்னடைவுடன் இருந்தாலும், சிறிது காலத்திற்கு குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பிலிருந்து பணத்தை மீளப்பெற்றன. பொது நிதிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் பொது நுகர்வு குறைக்கப்பட்டது. பரிமாற்றக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மூலதன உள்ளீடுகள் குறைந்ததன் விளைவாக வெளிநாட்டு நிதிகளின் பற்றாக்குறையை பிரதிபலிக்கும் மாற்று விகிதங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. உள்நாட்டுக் கேள்வி குறைந்தமை மற்றும் இறக்குமதிப் பிரதியீடு ஆகியன நடைமுறைக் கணக்குகளை மேம்படுத்த உதவின. நாணய மாற்றுத் தேய்மானம் விலைகளுக்கு விரைவாகச் சென்று பணவீக்கம் அதிகரித்தது. ஊதியங்கள் குறைவடைந்துள்ளதுடன், பணவீக்கம் வைப்புகளின் பெறுமதியை அழித்துவிட்டது, வேலையின்மை அதிகரித்ததுடன் குடும்பங்கள் கணிசமான உண்மையான வருமான இழப்புகளை சந்தித்தன. ”

இலங்கை இவ்வாறு திறமையாகக் கையாளுவதற்கு வாய்ப்புக்கள் குறைந்த  ஒரு தந்திரமான நிலையில் தன்னைக் காண்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு கொவிட்-19 மட்டும் காரணமிட்டாவிட்டாலும் இது விடயங்களை மிகவும் மோசமாக்கியுள்ளது. தொற்றுநோய் பல தசாப்தங்களாக வளர்ந்து வரும் கொள்கை பலவீனங்களை ஒரே நேரத்தில் வளர்ச்சி, நிதி மற்றும் வெளித் துறைகளை உள்ளடக்கிய ஒரே மாபெரும் அதிர்ச்சியாக மாற்றிவிட்டது.

சர்வதேச மூலதன சந்தைகளுக்கான அணுகல் ஒப்பீட்டளவில் குறுகிய வரலாற்றைப் பின்பற்றி, உள்நாட்டு கொள்கை குறைபாடுகள் மற்றும் வெளிநாட்டு அதிர்ச்சிகளாகிய: ஆசிய நெருக்கடிக்குப் பின்னரான சாதகமற்ற வெளிப்புற சூழலுக்கு மேலதிகமான ரஷ்யா மற்றும் ஈக்வடோர் நாடுகளுக்கான பலவீனமான எண்ணெய் விலைகள், அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான  சர்வதேச தடைகள், ஈக்வடோரிற்கான எல்-நினோ விளைவு, உக்ரேனுக்கான ரஷ்யாவின் கொந்தளிப்பு ஆகியவற்றினால் பேரினப் பொருளாதார நிலைமை ஸ்திரமின்மைக்கு உட்பட்டமையும்  மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வின் ஒரு  விடயமாக இருந்தது

குறுகிய காலத்தில்  பிணை எடுப்புக்கள் அவசியமாக இருக்கும், ஆனால் இது பிரச்சினைகளை பின்னர் மிக தொலைவிலுள்ள திகதியன்றுக்கு ஒத்திவைக்கும் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமேயாகும். கொவிட்-19 நெருக்கடியின் உலகளாவிய தன்மையைக் கருத்தில் கொண்டு, சீனாவிலிருந்து மேலும் இரு-பக்கக் கடன்கள் சாத்தியமாக இருக்கும்போது, ​​மேலும் இரு-பக்க உதவி ஒரு யதார்த்தமான விருப்பமாக இருக்காது. இது 1 டிரில்லியன் டொலர் கடன்பெறும்  இயல்திறனுடன், ஒரு சர்வதேச நாணய நிதியத் திட்டமானது மேலும் கடன் பெறுவதற்கான ஒரே யதார்த்தமான தெரிவினை வழங்குகிறது.

மறுதலிக்கும் நிலையில் வாழ்ந்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் கடுமையான யதார்த்தங்களை எழுப்ப வேண்டும். தேர்தலுக்கு முந்தைய துணிச்சலும் நீண்டகாலமாக நிலவிய சதித்திட்டக் கோட்பாடுகளும் உலகளாவிய நிதி நிறுவனங்களுடனான நடுநிலையான சிந்தனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்காக களைந்தெறியப்பட வேண்டும். ஒரு பங்கினை வகிப்பதற்கு வலுவூட்டப்பட்ட அனைத்து சட்டரீதியான நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து பொருளாதார முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட் வேண்டும்.

தவறுகள் செலவு மிக்கவையானதுடன் கொவிட்-19 தொற்றுநோய் பரவலை கடுமையான பொது சுகாதார நெருக்கடியிலிருந்து பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியாக மாற்றும் அபாயத்திற்கு இட்டுச் செல்லக்கூடும்.

சமூக இடைவெளி ஆனால் பொருளாதார ஒருங்கிணைவு

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Social distancing but economic convergence

- தனநாத் பெர்னான்டோ

புதிய கொரோனா வைரஸ் (கொவிட் -19) உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, சமீபத்திய வரலாற்றில் இது மூன்றாவது முறையாக பயங்கரவாதி அல்லாத எதிரிக்கு எதிராக நாம் போராட வேண்டியிருந்தது. முதலாவதாக, 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் சுனாமி எங்கள் கரையில் மோதியது, பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டெங்கு தீவிரமாகப் பரவியதுடன் இப்போது இந்த வைரஸ் பரவுகையாகும். அதேசமயம், எங்களுக்கு 30 வருடகால பயங்கரவாதப் போர் இருந்தது, அதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்தன. சுருக்கமாக, முன்னெப்போதையும் விட அதிகமான தேசிய அவசரநிலைகள் இருப்பதாகத் தெரிகிறது.

இத்தகைய நெருக்கடிகளின் போது, ​​ஒரு நாடாக தனிமைப்படுத்தப்படுவதும், தன்னிறைவும் இத்தகைய வெளிப்புற அதிர்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த தீர்வுகள் என்று உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற வெளிப்புற காரணிகளால் நமது உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இந்த முடிவுக்கு செல்வது இயற்கையானது.

இருப்பினும், இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சிறந்த கதை பௌத்த ஜாதகக் கதைகளிலுள்ள  “சம்மோதன ஜாதக” - வேட்டைக்காரன் மற்றும் பறவைகள் கூட்டத்தின் கதையாகும். வேட்டைக்காரன் பறவைகள் கூட்டத்திற்கு வேட்டைக்காரன்  அச்சுறுத்தலாக இருந்ததுடன் பறவைகள் தனிப்பட்ட திசைகளில் பறந்தமையால் வேட்டையாடுபவரின் வலையில் சிக்கிக்கொண்டன. இது சில தடவைகள் நடந்த பிறகு, பறவைகள் மூலோபாயமொன்றை வகுத்தன; அனைவரும் ஒன்றாக வலையை நோக்கி ஒரே திசையில் பறந்து, ஒரு மரத்தை நோக்கி தங்கள் சொண்டுகளால் இழுத்து வந்து, தப்பின. பொருளாதார தனிமை, சுய-நிலைத்தன்மை மற்றும் உலகமயமாக்கலிலிருந்து விலகிக்கொள்ளல் ஆகியவை தீர்வுகள் என்று தோன்றினாலும், உண்மை என்னவென்றால், முன்பை விட ஒன்றோடொன்று ஒன்றோடொன்று இணைந்திருக்கும் உலகில், அது நேர்மாறானதாகும்.

பொருளாதாரப் பாதிப்பு

இது உலகளாவிய சவால் என்பதால் கொவிட் -19 இன் தாக்கம் தனித்துவமானது. கொவிட் -19 இன் பொருளாதார தாக்கம் உள்நாட்டிலும் உலக அளவிலும் கடுமையாக இருக்கும். நகரங்களை மூடுதல் மற்றும் முடக்குதல் காரணமாக கேள்விப் பக்கத்தில், நுகர்வு கடுமையாக வீழ்ச்சியடையும். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% பங்களிக்கும் உலகத் தொழிற்சாலையாகிய சீனா, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விநியோகச் சங்கிலிகள் மற்றும் உற்பத்தி வலையமைப்பு இணைப்புக்கள் தற்போது செயற்படாததால் வழங்கல் பக்கத்தில், கடுமையான வீழ்ச்சி ஏற்படும்.

இலங்கையர்களைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தைகளில் (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) குறைந்த நுகர்வு, தொற்று பயம் காரணமாக நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் போதல் மற்றும் உலகளாவிய  உற்பத்தி வலையமைப்பினுள் குழம்பியுள்ளதால் விநியோகச் சங்கிலிகளைப் பராமரிப்பதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளுதல்  போன்ற காரணங்களால் நமது தைத்த ஆடை வர்த்தகம் அபாயத்தை எதிர்நோக்கும். எங்கள் பெரும்பாலான உணவு ஏற்றுமதிகள் மற்றும் எமது  ஏற்றுமதிப் பொருள் தொகுதியிலுள்ள பல பொருட்களைப் பொறுத்தவரையில் இது உண்மையாகும்.

மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவில் வைரஸின் தாக்கம் காரணமாக கருத்தில் கொண்டு எங்களுக்கு வரும் பணம் தொடர்ந்தும் குறைவடையும். இந்தத் தொடர்ச்சியான எதிர்வினையானது மக்கள் தங்கள் வாகன குத்தகை தவணைகளை செலுத்த முடியாத நிலை அல்லது வங்கி கடன் தவணை செலுத்துதல்களைத் தவறுதல் வரை தொடர்கிறது. பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பன எட்ட முடியாததாகிவிடும்.

வேலையின்மை அதிகமாக இருக்கும் மற்றும் செயல்படாத கடன்கள் அதிகரிக்கும். சுற்றுலா மேலும் பாதிக்கப்படுவதுடன் சுற்றுலாவுடன் தொடர்புடைய அனைத்து விநியோகச் சங்கிலிகளும் அதே கீழ்நோக்கிய போக்கில் தொடரும். அரசாங்கத்தின் தலையீட்டின் அடிப்படையில் பணவீக்கம் உயரும். இந்த நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் நமது நிதி நிலையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அளவில் பெரிய பொதுத் துறையை பாதுகாத்தல் குறித்து இலங்கை அரசு தீவிரமான கேள்விகளை எதிர்கொள்ளும். இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து பொருளாதாரங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

விலைக் கட்டுப்பாடு தீர்வாகாது

கடந்த செவ்வாய்க்கிழமை (17) இரவு, பொருளாதாரம் குறித்த சில நிவாரண நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜனாதிபதி அறிவித்தார். வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளைத் தனிமைப்படுத்தும் செயல்முறைக்கு அரசாங்கம் வழங்கும்  வசதியளித்தலானது பாராட்டத்தக்கதாகும். இருப்பினும், முகக் கவசங்கள், பருப்பு மற்றும் தகரத்திலடைத்த மீன் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் விலைக் கட்டுப்பாடுகள் ஏழைகளுக்கு உதவாது. இது வெறுமனே இருப்பில் இருக்கும் பொருட்களை  இறாக்கைகளிலிருந்து வேகமாக அப்புறப்படுத்தும்.

எந்தவொரு விற்பனையாளரும் எந்தவொரு பொருளையும் அதன் உண்மையான விலையை விடக் குறைந்த விலையில் விற்க விரும்புவதில்லை. மார்ச் முதல் வாரத்தில் மைசூர் பருப்பின் விலை வரம்பானது ரூபா. 124-200 ஆகவிருந்ததுடன்  ஒரு 425 கிராம் தகரத்திலடைத்த மீனின் விலை சுமார் ரூ. 220-300 ஆகவிருந்தது. எனவே, பருப்பு மற்றும் தகரத்திலடைத்த மீனைக் கட்டுப்பாட்டு விலையில் முறையே ரூபா. 65 மற்றும் ரூபா. 100 இற்கு விற்பதற்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும். இதன் விளைவுகள் என்னவென்றால், விற்பனையாளர்கள் சட்டரீதியான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக இவற்றை விற்பதை நிறுத்திவிடுவார்கள், இது ஏழைகளையும் பணக்காரர்களையும் தாக்கும், ஏனெனில் இறாக்கைகளில் அவர்கள் வாங்குவதற்கு எதுவும் இருக்காது, சந்தையை முழுவதுமாக சிதைத்து, அல்லது அரசாங்கத்தின் நோக்கத்தை தோற்கடித்து விற்பனையாளர்கள் தொடர்ந்தும் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். 

முகமூடிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் இதேபோன்ற நிலை ஏற்பட்டதுடன் அவை ஏற்கனவே மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக அரசாங்கம், தகரத்திலடைத்த மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகிய இரண்டிற்குமான இறக்குமதித் தீர்வையை குறைத்திருக்க முடியும், ஏனெனில் அதனைத்  இப்போது தாமதித்து முகமூடிகளுக்குச் செய்திருக்கிறார்கள். இது நுகர்வோருக்கு விலைச் சலுகைகளை வழங்க  வழிவகுப்பதுடன் விநியோகத்தையும் உறுதி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தகரத்திலடைத்த மீன் வகைகளுக்கும் அண்ணளவாக 35% தீர்வைக் கட்டணத்தை நாங்கள் செலுத்துகிறோம் என்பதை உங்களால் நம்ப முடியுமா?

வியாழக்கிழமையன்று  இலங்கை மத்திய வங்கி எமது நாணயமாற்று வீதத்தைப் பாதுகாக்க மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இது மீண்டும் ஏழைகளையும் வருமானம் குறைந்தவர்களையுமே அதிகம் பாதிக்கும். இப்போது வாகனங்கள் அதிக வருமானம் ஈட்டுபவர்களால் மட்டுமல்ல, நுண் மற்றும் சிறு தொழில் முனைவோரினாலும் தங்கள் தொழில்களை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களும் அவர்களது ஊழியர்களும் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்கள். சுவ்ரக  (SUV) வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் சமாளித்துக்கொள்வார்கள்.

உலகளாவிய ஒத்துழைப்புக்கான தருணம்

நிலையான மற்றும் குழப்பமான செய்தி ஊட்டங்கள் ஒன்றிணைந்து நாடுகளாக, நாம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உணரவைத்தன. இருப்பினும், உலகளாவிய சமூகமாக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. இந்த பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கு இந்த தொற்றுநோயிலிருந்து மீளவும், எதிர்கால சவால்களைத் தவிர்ப்பதற்கு மேலும் ஒத்துழைக்கவும் முழு உலகமும் நமக்குத் தேவைப்படுகின்றது. எமது செயல்பாடுகளைத் தொடங்குவதற்காக உலகின் பிற பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட எமது வழங்குனர்கள் மீள்வதும் அவர்களின் பணிக்குத் திரும்புவதும் எமக்கு அவசியமாகின்றது. எமது தயாரிப்புகள் சிறப்பாக இருக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் வேகமாக நகருவதற்கு எங்களுக்கு கொள்வனவுத் திறன் தேவை. கொவிட் -19 க்கான தடுப்பூசி நம்முடையதை விட அதிக இயல்திறன் கொண்ட விஞ்ஞானிகளால் முடிவு செய்யப்பட்டவுடன், அதை நம் மக்களுக்கு வியாபாரம் செய்யவும் கொள்வனவு செய்யவும் முடியும். தனியாக நாம் எல்லா சவால்களையும் எதிர்கொள்ள முடியாது என்பதற்கு இந்தத் தொற்றுநோய் நல்லதொரு நினைவூட்டலாகும். சுதந்திரத்தின் முக்கியத்துவமும், நமது சுதந்திரத்தை பொறுப்புடன் உரிமையாக்குவதும் இப்போது நமக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளன.

கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்குச் சீனா , இத்தாலி மற்றும் அமெரிக்காவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது. ரோமானிய கவிஞர் அன்னியோ செனெகாவின் ஒரு மேற்கோளாகிய “நாங்கள் ஒரே கடலில் இருந்துவரும் அலைகள்" என்பது அந்த பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இதேபோன்ற முறையில், ஜப்பான் சீனாவுக்கு சில மருத்துவ பொருட்களை நன்கொடையாக அளித்தது, பின்வரும் சீனக் கவிதை அதன் உறையில் எழுதப்பட்டதாகக் கூறப்பட்டது: “எங்களுக்கு வெவ்வேறு மலைகள் மற்றும் ஆறுகள் இருப்பினும், நாங்கள் ஒரே சூரியன், சந்திரன் மற்றும் வானத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.”

இந்த கொவிட் -19 தொற்றுநோய் பரவலானது நாம் அனைவரும் ஒரே கடலில் இருந்து வரும் அலைகள் என்பதையும்  நாம் அனைவரும் ஒரே சூரியன், சந்திரன் மற்றும் வானத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் நினைவூட்டுமாக.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

Food security and self-sufficiency

- பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

உணவு வழங்கல் சங்கிலிகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் செயலிழக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திப்பது சாதாரணமானதும் அவசியமானதுமாகும். ஆனால் புத்திசாலித்தனமாகவும், ஆதாரங்களால் அறிந்துகொண்ட வழிகளிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

எல்லா தரவரிசைகளும் குறிகாட்டிகளும் அவற்றின் அடிப்படையை உருவாக்கும் தரவுகளில் அல்லது அவற்றின் வடிவமைப்பில் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடலுக்கானதொரு பயனுள்ள தொடக்க புள்ளியை வழங்குகின்றன. உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறிகாட்டியானது  மலிவு, கிடைக்கும் தன்மை மற்றும் தரமும் பாதுகாப்பும் ஆகிய  மூன்று கூறுகளை உள்ளடக்கியதாகும். இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் குறித்த புதிய கூறு 2019 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.

உண்மையில், 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட மாநகர அரசாகிய சிங்கப்பூரில், விவசாய நிலங்களுக்கு அணுகல் இல்லை, எனவே உள்நாட்டில் வளர்க்கப்படும் உற்பத்திகள் அடிப்படைக் குறிகாட்டியில் முதலிடத்தில் உள்ளமையானது,  இந்த குறிகாட்டியானது பொது அறிவுக்கு அப்பாற்பட்ட உணவுப் பாதுகாப்புக்கான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இயற்கை வளங்கள் மற்றும் விரிதிறன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது சிங்கப்பூர் 11 இடங்களுக்குக் கீழே வருகின்றது. இது கடல் மட்ட உயர்வு, கடல் ஊட்டவளம் மிகுத்தல் மற்றும் உணவு இறக்குமதியில் தங்கியிருத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகும். ஆனால் 11 ஆவது இடத்தில் கூட, இது தெற்காசிய நாடுகளை விட சிறப்பாக செயல்படுகிறது.

 நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறேன். அனர்த்தக் கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான தொலைத்தொடர்பு வளங்களை வழங்குவதற்கான டெம்பியர் சமவாயத்திற்கு இலங்கை அணுகுதல் மற்றும் வை 2 கே பிரச்சினைக்குத் தயார்படுத்தல் ஆகியன உடனடி காரணங்களாகும். நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விவசாய விநியோகச் சங்கிலிகளை ஆய்வுசெய்து வருகிறோம்.

 மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையிலான சமரசம்

மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையில் எப்போதுமே ஒரு சமரசம் இருக்கும். செலவு பற்றிய எந்தவொரு அக்கறையும் இல்லாவிட்டால், 100% தேவையற்ற வசதிகளுடன் மேலும் ஆதரிக்கப்படும் அதிவிசேட மீண்டும்வரும் தன்மையை ஒருவர் கொண்டிருக்கலாம். சிலநேரங்களில் அக்கறைகள் மிகவும் அதிகமாகவும் சூழல் இடர்மிக்கதாகவும்  இருக்கும்போது ஒருவர் பல உதவிபெறுவார். உதாரணமாக, யுத்தத்தின் மிக மோசமான நாட்களில்,  எல்.ரீ.ரீ.ஈ கொழும்பைத் தாக்கியபோது இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பொறியியலாளர்கள் எதிர்பாராதவிதமாகத் திடீரென வேலைநிறுத்தம் செய்த போத, நடமாடும் அடிப்படையிலான நிலையங்களுக்கு பெற்றரி உதவி பெறுமாறு  என்னிடம் கூறப்பட்டது, அவை டீசல் மின்பிறப்பாக்கிகளால் மேலும் ஆதரிக்கப்பட்டன. ஆனால், இவையனைத்திற்கும்  பணம் செலவாகிறது.

உணவுப் பாதுகாப்பிலும் இதுவே உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கை நம்புவது இடரினைக் குறைக்கிறது என்று ஒருவர் நம்பலாம். ஆனால் உருளைக்கிழங்கின் உள்ளூர் உற்பத்தி செலவுகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கை விட கணிசமாக அதிகமானது என்பது அனைவரும் அறிந்ததே. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு விசேட வியாபாரப்பண்ட அறவீடுகளை விதிப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றார்கள். இதன் பொருள் என்னவென்றால், உள்நாட்டு நுகர்வோர் திறமையாக உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் உருளைக்கிழங்கிற்கு அதிக பணம் செலுத்துவதுடன் அவர்கள் உட்கொள்ளும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு அரசாங்கத்திற்கு மறைமுக வரி செலுத்துகிறார்கள்.

தற்காப்புப் பொருளாதாரக் கொள்கைகள் அனைவருக்கும் உணவு விலையை அதிகப்படுத்துகின்றன. அதன் பெறுபேறாக,  உழைப்புச் செலவு அதிகமாக உள்ளது. எனவே, உலகளவில் போட்டியிட வேண்டிய பல கைத்தொழில்கள் அதிக உழைப்பு செலவுகளால் பாதிக்கப்படுகின்றன.

திறமையற்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் ஆதாரங்கள் ஆபத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயம் இயல்பாகவே இடர்மிக்கதாகும். வெள்ளம், வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய் பயிர்களை அழிக்கும். உண்மையிலேயே மீண்டுவரும் விநியோகச் சங்கிலிகள் ஒரு தனிப்பட்ட பிரதேசத்தை (உருளைக்கிழங்கிற்காக வெலிமடை போன்று) அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டைக் கூட நம்பியிருக்காது. உதாரணமாக வியட்நாம் என எடுத்துக் கொண்டால்  நாட்டிற்குத் தேவையான அரிசித் தேவைக்கு முற்றிலும் சார்ந்திருக்காமல்,  அரிசியில் தன்னிறைவு பெறுவதை ஒரு முழுமையான கொள்கை நோக்கமாக நினைப்பது நல்ல யோசனையாக இருக்காது.

கொவிட்-19 மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு முகங்கொடுத்து, வியட்நாம் அரிசி ஏற்றுமதியில் சில வரம்புகளை விதித்துள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களிடையே அக்கறைக்கு நியாயமான காரணத்தைத் தரும். ஆனால் மறுபுறம், உள்ளூர் உற்பத்தியை முழுமையாக நம்புவதும் ஆபத்தானது என்பது 2016-17இல் ஏற்பட்ட வறட்சியானது, 2015-16 ஆம் ஆண்டில் 2,903 மெட்ரிக் டொன்னாகவிருந்த அரிசி உற்பத்தியை 1,474 மெட்ரிக் டொன்னாகக் குறைத்தபோது விளங்கியது.  

 எனவே, உணவுப் பாதுகாப்பிற்கான உண்மையான பதில் தன்னிறைவுக்கான எளிமையான முயற்சி அல்ல, மாறாக பல்வேறு மூலங்களின் மூலம் செலவு மற்றும் இடர் நிர்வாகத்தை சமநிலைப்படுத்துதல் மற்றும் விநியோகச் சங்கிலிகள் வலுவானவை என்பதை உறுதிப்படுத்துதல் என்பனவாகும். இறுகும் புள்ளிகளைக் கட்டுப்படுத்தும் தனியுரிமையின்  தோற்றத்தைத் தடுப்பது பிரதிபலிப்பின் முக்கிய அங்கமாகும். இந்த சிக்கலான சமரசங்கள் மற்றும் சமப்படுத்தல்களைத்  தான் உலகளாவிய உணவு பாதுகாப்பு குறிகாட்டியானது, 34 வெவ்வேறு குறிகாட்டிகளின் நிறையிட்ட கலவையினூடாகச்  சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு - மதிப்பீடுசெய்யப்பட்டது

2019 ஆம் ஆண்டில் 113 நாடுகளில் இலங்கை 66 வது இடத்தைப் பிடித்தது. இது ஊட்டச்சத்துத் தராதரங்கள்,  சராசரி உணவு செலவில் மாற்றம், உலக வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்கள் தொகை விகிதம், உணவு பாதுகாப்பு, உணவு இழப்பு, நகர்ப்புற உறிஞ்சுதல் திறன், விவசாய உற்பத்தியின் ஏற்ற இறக்கம், மற்றும் விவசாயிகளுக்கு நிதியளிப்பதற்கான அணுகல்  போன்றவற்றில் அதிக மதிப்பெண் பெற்றது. விவசாய ஆய்வு மற்றும் அபிவிருத்தி மீதான பொதுச் செலவு, கொள்வனவு இயல்திறனை அடிப்படையாகக் கொண்ட தலா மொத்தத் தேசிய உற்பத்தி, புரதத் தரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை (2018 மற்றும் 2019 க்கு இடையில் மிகப்பெரிய சரிவு) ஆகியவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பெண் குறைக்கப்பட்டது.

இலங்கையின் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரியை விட சற்று குறைவாக இருந்ததுடன் தரம் மற்றும் பாதுகாப்பில் சற்று குறைவாக இருந்தது. இது தெற்காசியாவில் அதன் சகாக்களை விட முன்னால் இருந்தது, ஆனால், இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் போன்ற சக நாடுகளுக்குப் பின்னால் இருந்தது. இந்தியா 72 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் (78 வது இடம்) மற்றும் நேபாளம் (79 வது) என அதனைவிடக் குறைவாக உள்ளன. வழக்கம் போல், இலங்கை மிகவும் மோசமாக இல்லை, ஆனால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 

இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் ஆகியன கலவையில் சேர்க்கப்படும்போது, ​​இலங்கை 113 இல் 67 வது இடத்தினுள் வருகின்றது. சில நாடுகளில் மீண்டுவருதல் தொடர்பான காரணிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பரந்த ஊசலாட்டத்தைக் காட்டுகின்றன. அடிப்படைக் குறிகாட்டியில் 12 வது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் காரணிகளாக இருக்கும்போது 16 வது இடத்திற்கு வீழ்ச்சியடைகிறது, அதே நேரத்தில் நியூசிலாந்து அவுஸ்திரேலியாவைவிட  ஐந்து ஸ்தானங்கள் முந்திக்கொண்டு 14வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.

செலவுக்கு உணர்திறன் கொண்ட மீண்டுவரும் தன்மை

கொவிட்-19 இற்கான பிரதிபலிப்பும், அதன் விளைவாக உணவு வழங்கல் சங்கிலிகளால் ஏற்பட்ட சேதமும் முழு விவசாய முறையையும் முழுமையான மீளாய்வுக்கு அழைப்பு விடுக்கின்றது. தற்போதைய அமைப்பின் பலவீனம் வெறுமனே விடப்பட்டுள்ளது. ஆனால் பிரதிபலிப்பானது நுணுக்கமாக இருப்பதுடன் ஆதாரங்களை நிதானமாக கருத்தில் கொண்டும், உணவில் பணத்திற்கான  மதிப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டும்  வழங்கப்பட வேண்டும். திறனற்ற உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக இறக்குமதியைத் தடைசெய்வதற்கும் நுகர்வோர் மீது வரி விதிப்பதற்கும் பதிலாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பன்முகப்படுத்தப்பட்டிருப்பதால் விநியோகச் சங்கிலிகள் நெகிழக்கூடியவை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விநியோகச் சங்கிலிகளில் இணைப்புகளின் தனியுரிமையைத் தடுப்பதே இதைச் செய்வதற்கான சிறந்த வழியாகும்.

தன்னிறைவு போன்ற சுலோகங்களுக்கு எளிமையான பின்வாங்கல் போதுமானதாக இருக்காது. 1970 களில் இருந்தே அந்தக் கொள்கைகளில் இலங்கைக்கு அனுபவம் உள்ளது. பின்னர் அவை  வசதிபடைத்தவர்களுக்கு கறுப்புச் சந்தையும் ஏழைகளுக்கு  ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் வழிவகுத்தன. மிகவும் எளிமையான நேரத்தில் செயல்படுத்தப்பட்ட அவற்றை பலசரக்குக் கடைகளால் நுகர்வோர் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாத சிக்கலான இன்றைய பொருளாதார நிலையில்  செயற்படுத்த முடியாதுள்ளது.